அடுத்தவர் பாராட்டுக்காக வேலை செய்யாதே

அடுத்தவர் பாராட்டுக்காக வேலை செய்யாதே :

ஒரு பணக்காரர் தன் வீட்டில் கடவுள் சிலை வைக்க, ஒரு சிற்பியை அணுகி சென்றார். அவர் சென்ற நேரம் அந்த சிற்பி ஒரு பெண் கடவுள் சிலையை செதுக்கிக் கொண்டிருந்தார்.

கொஞ்ச நேரம் அவர் செதுக்குவதை வேடிக்கை பார்த்த அவர், சிற்பி செதுக்கிய இரண்டு சிலைகளும் ஒரே மாதிரி இருப்பதை கவனித்தார்.

உடனே பணக்காரர் ”ஒரே கோவிலில் எப்படி ஒரே மாதிரி சிலைகள் வைப்பார்கள் ? இல்லை இந்த இரண்டு சிலைகளும் வேறு வேறு கோவிலுக்காக செதுக்குகிறீர்களா?” என்று சிற்பியிடம் கேட்டார்

சிற்பி சிரித்துக்கொண்டே “இல்லை ஐயா கீழே கிடக்கும் சிலையானது உடைந்து போனது” என்றார்

பணக்காரர் ஆச்சரியத்துடன் ”என்ன சொல்றீங்க மிகவும் அழகாக தானே இருக்கிறது அந்த சிலை… எந்த பாகமும் உடையக்கூட இல்லையே” எனக் கேட்டார்.

“அந்த சிலையின் மூக்கில் சின்ன கீறல் இருக்கிறது பாருங்கள்” என்றார் சிற்பி.

“ஆமாம் ….அது சரி.. இந்த சிலையை எங்கே வைக்கப் போகிறீர்கள் ? ” என்று கேட்டார் பணக்காரர்.

“இது கோவில் கோபுரத்தில் நாற்பது அடி உயரத்தில் வரும் சிலை ” உளியை உயர்த்திக் காட்டி சொன்னார் சிற்பி.

பணக்காரர் வியப்புடன் ”நாற்பது அடி உயரத்தில் இந்த சின்ன கீறலை யார் கண்டுபிடிக்கப் போகிறார்கள் ? இதற்காக ஏன் இன்னொரு சிலை செய்கிறாய் முட்டாள் ” என்றார்.

“அந்த சிலையில் கீறல் இருப்பது எனக்கு தெரியுமே.. எப்போது அந்த கோவில் வழி சென்றாலும் எனக்கு என் தொழிலில் உள்ள குறை உறுத்துமே.. அதனால் தான் இன்னொரு சிலை செய்கிறேன் ” என்றார் சிற்பி.

நீதி : அடுத்தவர் பாராட்டுக்காக வேலை செய்யாதே. உன் மனத்திருப்திகாக வேலை செய்.

Comments

Popular posts from this blog

இது 'தான்' வாழ்க்கை

நம்பிக்கை தான்

வெற்றிகரமான வாழ்க்கைக்கு பத்து சூத்திரங்கள்