வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன் :

வாழ்க வளமுடன் - என்பது எதைக்குறிக்கிறது...?

வாழ்க என்பது வாழ்த்துச்சொல்.

வளமுடன் என்பது ஒரு நிறைவுத்தன்மையை குறிக்கும். வாழ்க வளமுடன் என்று ஒருவர் வாழ்த்தினால் நிறைவுத்தன்மையுடன் வாழ்க என்று ஒருவர் வாழ்த்துகிறார் என்று அர்த்தம்.

ஒருவன் எப்போது நிறைவுத்தன்மை அடையமுடியும்?

தேவைகள் பூர்த்தியடையும்போது நிறைவுத்தன்மை ஏற்படும்.

தேவைகளை எப்படி பட்டியலிடுவது...?

மனிதனின் பொதுவான தேவையை எளிதாக பட்டியலிட்டு விடலாம்.

ஒருவன் மகிழ்ச்சியாக வாழ ஐந்து தேவைகள் முக்கியம்.

1) உடல் நலம் 

2) நீளாயுள் 

3) நிறைசெல்வம் 

4) உயர்புகழ் 

5) மெய்ஞானம்

இந்த ஐந்தையும் உணர்ந்து அனுபவித்து கடந்து வாழும் வாழ்க்கைதான் முழுமையான வாழ்க்கை. உலகின் எல்லா இன்பங்களும் இந்த ஐந்தில் அடங்கிவிடும்.

"வாழ்க வளமுடன்" என்று ஒருவர் உச்சரித்து வாழ்த்தும்போது, நீங்கள் இந்த ஐந்து செல்வங்களையும் பெற்றுவாழுங்கள் என்று வாழ்த்துகிறார்.

இது வெறும் வார்த்தை ஜாலமல்ல ! இதனூடே ஒரு ஆழமான உளவியல் தன்மை ஒளிந்து இருக்கிறது. அடுத்து இதன்பின் ஒரு அறிவியல் தன்மாற்றமும் இருக்கிறது.

அது என்ன....?

"வாழ்க வளமுடன்" என்று இன்னொருமுறை உச்சரித்து பாருங்கள். உங்களின் உள்நாக்கு அதாவது தொண்டையின் உள் மேல்பகுதியில் “ழ்” எனும்போது ஒரு அழுத்தம் நிகழ்வதை உங்களால் உணரமுடியும்.

உள்நாக்கின் உச்சியில் அதாவது நெற்றிக்கும், பின்மண்டையில் பிடறிக்கண்ணுக்கும் நேர்கோட்டில் ஒரு சூட்சுமம் ஒளிந்துள்ளது. அந்த சூட்சுமம் இந்த பிரபஞ்சத்தோடு நேரடியாக தொடர்புகொண்டிருக்கும் சக்தி. உங்களின் எண்ணங்களில் எழும்தேவைகளை பிரபஞ்சத்தில் கட்டளையாக மாற்றி அதனை பெற்றுத்தரும் சூட்சுமம் அது.

உங்கள் எண்ணம் வலிமைமிக்கது என்றால், அது உங்கள் மூலமாகவே செயலுக்கு வந்துவிடும். கொஞ்சம் பலவீனமான எண்ணம் என்றாலும் நீங்கள் கவலைப்படத்தேவையில்லை... அட்லீஸ்ட்.... நீங்கள் பேரப்பிள்ளைகளை எடுப்பதற்குள்ளாகவாவது செயலுக்கு வந்துவிடும். எண்ணம் எப்போதும் வீணாவது இல்லை. அதனால் எண்ணுவதை வலிமையாக எண்ணுவது சாலச்சிறந்தது.

அந்த சூட்சுமப்பகுதியை அறிவியலில் பீனியல் சுரப்பி என்பார்கள். ஆன்மிகத்தில் துரியம் என்பார்கள். "வாழ்க வளமுடன்" என உச்சரிக்கும் போதும் உங்களின் துரியமையம் கட்டளைகளை பிரபஞ்சத்திற்கு அனுப்பிக்கொண்டே இருக்கும். ஒருவர் உங்களை வாழ்த்தும்போது நீங்கள் வளமுடன் வாழ கட்டளைகளை அவர் பிரபஞ்சத்திற்கு அனுப்பிக்கொண்டே இருக்கிறார் என்று அர்த்தம். 

"வாழ்க வளமுடன்" வெறும் வாழ்த்துச்சொல் அல்ல. அது ஒரு மந்திரச்சொல்.

வாழ்க வையகம்; வாழ்க வளமுடன்.

Comments

Popular posts from this blog

இது 'தான்' வாழ்க்கை

நம்பிக்கை தான்

வெற்றிகரமான வாழ்க்கைக்கு பத்து சூத்திரங்கள்